டோக்கன் இல்லா பயணிகளுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்
திருப்பதி, ஏப். 8–
திருப்பதியில் கூட்டம் அதிகரித்த காரணத்தால் இலவச தரிசனம் செய்ய 50 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் பக்தர்கள் தங்கள் திருப்பதி பயண திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக திருப்பதி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். இதனால் நேற்று இரவு நிலவரப்படி இலவச தரிசனத்திற்கு சுமார் 50 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 300 ரூபாய் தரிசனத்திற்கு 5 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் வாங்கிய பக்தர்கள், திருப்பதியில் இருந்து பாதயாத்திரை ஆக சென்று திவ்யதர்சன டோக்கன்கள் வாங்கிய பக்தர்கள் ஆகியோர் இலவச தரிசனத்திற்காக சுமார் ஆறு மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
50 மணி நேர காத்திருப்பு
இந்த நிலையில் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவை இல்லாமல், திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு உள்ள
இரண்டு வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் நிரம்பி சாமி தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர்.
அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 8 கிலோமீட்டர் நீள வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே காத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காப்பி ஆகிய அத்யாவசிய தேவைகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் இலவச தரிசனத்திற்காக 48 மணி நேரத்திற்கும் மேல்
காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் தாங்கள் திருப்பதி பயணத் திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வரிசையில் பொறுமையாக காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.