செய்திகள்

சென்னையில் ரூ.45 கோடியில் 379 சாலைகள் சீரமைப்பு

சென்னை, டிச.17–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளில் தொடர் பயன்பாட்டின் காரணமாகவும், பருவமழையின் காரணமாகவும் ஒரு சில சாலைகளில் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. பருவமழையின் காரணமாக, மாநகராட்சியின் சார்பில் இந்தச் சாலைகளில் ஜல்லிக் கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு பள்ளங்களும், குழிகளும் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டன.

முதலமைச்சர் பருவமழை முடிவடைந்தவுடன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படும் என அறிவித்திருந்தார். மேலும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, சென்னையில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, மேயரின் ஆலோசனையின்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற் கட்டமாக ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள், 63 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 2 சிமெண்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள், 47 இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகளை மேம்படுத்தப்பட உள்ளன.

எந்தெந்த சாலைகள்

மேம்படுத்தப்பட உள்ள சாலைகளின் விவரம் வருமாறு:–

திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.19.51 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள் மேம்படுத்த 20 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.17.35 கோடி மதிப்பீட்டில் 34 பேருந்து சாலைகளை தார் சாலைகளாக அமைக்க 13 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 63 உட்புறச் சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 4 சிப்பங்களாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 47 சாலைகள் பேவர் பிளாக்குகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிக்காக 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

உடனடியாக பணி

மேற்குறிப்பிட்ட சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 3.1.2023 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

சாலைகள் அமைக்கப்படும் பொழுது ஏற்கனவே உள்ள சாலை அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படும். மழைநீர் வழிந்தோடும் வகையில் வடிகால் உள்ள திசையில் சாலை சரிவுடன் அமைக்கப்படும்.

மேலும், சாலைகள் அமைக்கப்படும்பொழுது அப்பகுதியில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்புகள் அடங்கிய பலகைகளை உள்ளபடியே பராமரித்தல், சாலைகளில் தேவையான இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வேலி அமைத்தல், புதிய சாலைகள் அமைக்கப்படும் இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் தேவைப்படின் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைத்தல்,

சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைத்தல் மற்றும் மழைநீர் வடிகால் இல்லாத உட்புறச் சாலைகளில் மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் சாலையின் இருபுறமும் சிறிய வடிகால் அமைத்தல் போன்ற பணிகளும், சாலைப் பணிகளுடன் இணைத்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ககன்தீப் சிங் பேடிகூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *