சென்னை, ஜுன். 21–
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 31 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நேற்று சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு “மக்களுக்கான இளைஞர்கள்” என்ற அமைப்பின் மாநில தலைவர் ஆண்டனி தினகரன் தலைமையில் 31 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பூக்கடை போலீசார் அவர்களை கைது செய்து பிறகு விடுவித்தனர்.
இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் 31 பேர் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 143- சட்டவிரோதமாக கூடுதல், 188- அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல் மற்றும் தமிழ்நாடு காவல் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.