பானாஜி, மார்ச் 10–
கோவாவில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் செயல்படும் நேரம் இரண்டு நாட்களுக்கு குறைக்கப்படும் என அம்மாநில கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கோடைக்காலம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கக் கொண்டே வருகிறது. அந்த வகையில், வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சராசரி வெப்பநிலையை விட கோவாவில் 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 மணி வரை பள்ளி
இந்த அறிவிப்பின் காரணமாக, பள்ளி மாணவர்களின் நலன் கருதி கோவாவில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு மதிய நேரத்திற்கு (12 மணி வரை ) பிறகு விடுமுறை அளிக்க கல்வித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை கல்வி இயக்குனர் ஷைலேஷ் ஜிங்காடே தற்போது வெளியிட்டுள்ளார்.
மேலும் பெரும்பாலான பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருப்பதால் நேர மேலாண்மையை சரியாக கையாள வேண்டும் என்றும் ஷைலேஷ் ஜிங்காடே கேட்டு கொண்டுள்ளார். நேற்றைய பகல் நேர வெப்பநிலை சராசரியை விட 4.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்த நிலையில், மார்ச் 11ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.