டெல்லி, டிச. 21–
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு பின்பற்ற இயலவில்லை என்றால், நடைப்பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ராகுல்காந்திக்கு கடிதம்
சீனா மற்றும் கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், முகமூடி, சானிடைசர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், பொது சுகாதார அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய நலன் கருதி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.