சிறீநகர், பிப். 10–
ஜம்மு காஷ்மீரில் உள்ள 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக பேரிடர் மேலாண் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமயமலையையொட்டி அமைந்துள்ள காஷ்மீரில் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் அதிகம் உள்ளன. குளிர்காலத்தில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். அதே போல் குளிர்காலத்தில் அடிக்கடி பனிச்சரிவும் ஏற்படும்.
இந்நிலையில், காஷ்மீரில் அடுத்த 24 மணிநேரத்தில் பனிச்சரிவு ஆபத்து ஏற்படக்கூடிய மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பை ஜம்மு காஷ்மீரின் பேரிடர் மேலாண்மை கழகம் வெளியிட்டுள்ளது.
12 மாவட்டங்களில் பனிச்சரிவு
அதன்படி, நடுத்தர மட்டத்திலான ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பனிச்சரிவானது அனந்த்நாக், பந்திப்பூர், பாரமுல்லா, கந்தர்பால், குப்வாரா, குல்காம், தோடா, கிஷ்த்வார், பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரம் முதல் 2,500 மீட்டர் உயரத்தில் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த மட்டத்திலான ஆபத்து ஏற்படுத்த கூடிய பனிச்சரிவானது ரியாசி, ரஜோரி, ராம்பன் மாவட்டங்களில் 2 ஆயிரம் முதல் 2,500 மீட்டர் உயரத்தில் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.