டுவிட்டரில் பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி, ஜன. 7–
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய ராணுவத்தின் பெண் வீராங்கனைகள் பங்கேற்பது குறித்து பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சூடான் நாட்டின் அபெய் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், முழுவதும் பெண் வீராங்கனைகளை கொண்ட இந்திய அமைதி படையினர் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இன்னும் மகிழ்ச்சி
இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவம் அதன் மிகப்பெரிய பெண் வீரர்கள் அடங்கிய அமைதி காக்கும் படையினரை அபெயில் பணியில் ஈடுபடுத்துகிறது என்று குறிப்பிட்டு இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ஐநாவின் அமைதி காக்கும் படையில் இந்தியா பங்களிப்பை வழங்குவது பாரம்பரியமாக உள்ளது என்றார். எங்களின் பெண் ஆற்றல் இதில் பங்கேற்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.