சென்னை, செப். 12–
தமிழகத்தில் இ–சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.
சிகரெட்டை போன்றே ‘இ சிகரெட்’டும் புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால் அதற்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய 3 துணைக்குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்த நிலையில், இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. டெல்லியில் ஆகஸ்ட் 30–ந்தேதி மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு,‘இ சிகரெட்’ தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதனையடுத்து இ–சிகரெட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
‘இ சிகரெட்’ என்பது சிகரெட்டை போலவே இருக்கும் ஒரு மின்னணு கருவி. சிகரெட் புகைக்க நினைக்கும் போது இதை வாயில் வைத்து உறிஞ்சினால் உள்ளே இருக்கும் நிக்கோடின் புகை கிளம்பும். அந்த புகையை உள்ளிழுத்தால் சிகரெட் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும்.