செய்திகள்

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன்

வாஷிங்டன், ஜன. 7–

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரில் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வருகின்றனர்.

இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பாடம் நடத்த வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அமர்ந்து இருந்த மாணவர்களில் இருந்து திடீரென 6 வயது சிறுவன் எழுந்து நின்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி ஒரு ரவுண்ட் சுட்டுள்ளான்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி காவல் தலைமை அதிகாரி ஸ்டுவ் ட்ரூ கூறும்போது, 6 வயது சிறுவனை போலீஸ் காவலில் எடுத்து உள்ளோம்.

இந்த சம்பவத்தில் வேறு மாணவர்கள் யாருக்கும் தொடர்பு எதுவும் இல்லை. துப்பாக்கி சிறுவனுக்கு எப்படி கிடைத்தது? இதன் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அப்பள்ளியின் சூப்பிரெண்ட் ஜார்ஜ் பார்க்கர் கூறும்போது, சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மனமுடைந்து போனேன். ஆசிரியர்கள் முதலில், இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன் அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் 8 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *