லக்னோ, ஜன. 10–
அயோத்தியில் வரும் 22–ந்தேதி நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அன்று பொது விடுமுறை விடப்படுவதாக உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். நாடு முழுவதும் வி.ஐ.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, அன்றைய நாளில் பொது விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் யோகி உத்தரவிட்டுள்ளார்.
இது தெடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் , வர்த்தக நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்றார்
அன்றைய நாளில், மதுபான கடைகள் மாநிலத்தில் திறக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்திக்கு நேற்று வந்த முதல்வர் யோகி, சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி அறிவுறுத்தல்களை வழங்கினார். நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர வாய்ப்புள்ளதால், 18 அதிகாரபூர்வ மொழிகளிலும் தகவல் பலகைகளை நிறுவ அவர் வலியுறுத்தினார்.