செய்திகள்

27 ந்தேதி மருதுபாண்டியர்கள் குரு பூஜை: 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவு

சிவகங்கை, அக். 19–

மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை பகுதியை ஆண்ட அரசி வேலுநாச்சியாரின் படை தளபதிகளாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள். 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 3 நாட்கள் கழித்து இவர்களது சடலங்கள் இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சமுதாய மக்களின் சார்பில் காளையார்கோயிலில் 27 ந்தேதி குருபூஜை விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்த, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் காளையார்கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குருபூஜையையொட்டி காளையார் கோவிலுக்கு வரும் கார்கள் கண்காணிக்கப்படும் என்றும், கொண்டாட்டம் என்கிற பெயரில் கார்கள் மீதேறி பயணிப்பது, தொங்கிக்கொண்டு பயணிப்பது என விதி மீறல்களில் ஈடுபட்டால் கார் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 நாட்களுக்கு 144 தடைஉத்தரவு

இந்நிலையில் மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் அக்டோபர் 23 ந்தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *