புதுடெல்லி, பிப்.14-
நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சோனியா காந்தி போட்டியிட இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினர் வேட்பாளராக சோனியா காந்தி போட்டியிடுகிறார். இதேபோல் பீகார் மாநிலத்திலிருந்து அகிலேஷ் பிரசாத் சிங், இமாச்சல பிரதேசத்திலிருந்து அபிஷேக் மனு சிங்வி, மகாராஷ்டிராவிலிருந்து சந்தரகாந்த் ஹந்தோர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்து.
இன்று ஜெய்ப்பூர் சென்ற சோனியா காந்தி, அங்குள்ள சட்டசபை வளாகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி, ராகுல், முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சோனியா காந்தி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது உறுதியானதால், ரேபரலி அல்லது அமேதி மக்களவை தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம் என தெரிகிறது.
கடந்த 1997 டிசம்பரில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். அவரது மகன் ராகுல் காந்தி புதிய தலைவராக பதவியேற்றார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டில் காங்கிரசின் தற்காலிக தலைவராக அவர் பதவியேற்றார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் காங்கிரசின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 1999ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக சோனியா காந்தி போட்டியிட்டார். பின்னர் அவர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மாறினார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
ரேபரலியில் போட்டியிடும்போதே சோனியா காந்தி, இனி மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். எனவே சோனியா காந்தி, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சோனியா 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.