பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல்
சென்னை, ஜன.9-
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற மத்திய மந்திரி பியூஸ் கோயல், விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த விஜயகாந்த் வீட்டிற்கு நேற்று நேரில் சென்றார். அங்கு, விஜயகாந்த்தின் உருவ படத்திற்கு மலர் மாலை வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பியூஷ்கோயல் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து பியூஷ்கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மூத்த சகோதரர் அண்ணன் விஜயகாந்த் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நாங்கள் இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக பயணித்தோம். எப்போதும், சிரித்த முகத்துடன் இருப்பார். தமிழக மக்களின் மீது மதிப்பும், அளவுக்கு அதிகமான அன்பும் கொண்டிருந்தார்.
சினிமா துறையிலும் அவர் முத்திரை பதித்தார். கடந்த முறை இதே வீட்டிற்கு நான் வந்தபோது விஜயகாந்த் தமிழக அரசியல் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் எனக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவர் தமிழகத்தின் எதிர்காலத்திற்காக எப்போதும் வழிகாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.