சென்னை, நவ.30–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மேயர் மற்றும் அதிகாரிகள் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தனர்.
அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து, பொதுமக்களிடம் முதலமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து தமிழக காவல்துறையின் கமாண்டோ பிரிவையும் சந்தித்தார்.
ஆய்வின்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, துணை மேயர் மகேஷ்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.