காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
ராஜஸ்தான், நவ. 21-
ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு இன்றுடன் இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இணைந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், முக்கிய வாக்குறுதிகளாக விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 400, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 4 லட்சம் அரசு வேலைகள், 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் தொகை ரூ. 50 லட்சமாக உயர்வு.
பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும்.
மாட்டுச்சாணம் கிலோ ரூ.2 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.15 லட்சம் காப்பீடு செய்யப்படும். கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும்.
ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.