இஸ்லாமாபாத், ஜன. 04–
பாகிஸ்தான் தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாக இம்ரான் கான் மற்றும் ஃபவத் சௌத்ரி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்து வந்த 4 தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் இம்ரான் கானும், ஃபவத் சௌத்ரியும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அத்துடன், இந்த வழக்கின் விசாரணை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
150 க்கும் மேற்பட்ட வழக்கு
ஏற்கெனவே, வெவ்வேறு வழக்குகளில் இம்ரான் கானும், ஃபவத் சௌத்ரியும் ராவல் பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கின் விசாரணை சிறைச்சாலை வளாகத்திலேயே நடைபெற்றது. கடந்த 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியை இழந்ததிலிருந்து, இம்ரான் கான் மீது 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.