செய்திகள்

மிக்ஜாம் புயல் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் உதவி

சென்னை, டிச.10-–

மிக்ஜாம் புயல் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த பணம் ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் பல பகுதிகளில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது.

நுங்கம்பாக்கத்தில் வரலாறு காணாத அளவில் 44 செ.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 43 செ.மீட்டரும் மழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதந்தன. 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கால்நடைகளும் இறந்துள்ளன.

மீட்பு பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அந்த 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட விரிவான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4-ந் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

முன்னதாக, மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. முதலமைச்சர் தலைமையில் இதுகுறித்து கள ஆய்வுகள், ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.

மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். மீட்பு பணிகளுக்கு தேவையான டீசல் மோட்டார் பம்பு செட்டுகளும், படகுகளும், பொக்லைன் எந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

களத்தில் 50- ஐ.ஏ.எஸ்.,

ஐ.பி.எஸ். அதிகாரிகள்

இவை புயல் மழையின் தாக்கத்திற்கு பிறகு உடனடியாக களத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர்களும், 50-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டன.

அதோடு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாரிய பணியாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

51 லட்சம் உணவு

பொட்டலங்கள் வினியோகம்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 8-ந் தேதி வரை, மூன்றுவேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் பெறப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. 58 ஆயிரத்து 222 கிலோ பால் பவுடர், 9.67 லட்சம் குடிநீர் பாட்டில்கள், 2.65 லட்சம் பிரட் பாக்கெட், 10 லட்சத்து 38 ஆயிரத்து 175 பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டு உள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், அந்த பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி, பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தொகை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ரூ. 6 ஆயிரம் நிவாரணம்

அதன் அடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத்தொகையை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

* புயல், வெள்ளத்தால் உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியும்,

* சேதம் அடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.8 ஆயிரமாக உயர்த்தியும்,

* மழையால் பாதிக்கப்பட்ட (33 சதவீத மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தியும்;

* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருந்தால் (33 சதவீதம் மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக எக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து, ரூ.22 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியும்;

* மழையால் பாதிக்கப்பட்ட (33 சதவீதம் மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-ல் இருந்து, ரூ.8,500 ஆக உயர்த்தியும்;

* எருது, பசு உள்ளிட்ட கால்நடை களின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் என்றிருந்ததை, ரூ.37 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியும்;

* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3 ஆயிரம் என்றிருந்ததை ரூ.4 ஆயிரமாக உயர்த்தியும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

படகுகள், வலைகளுக்கு

ரூ.50 ஆயிரம்

* சேதம் அடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவியாக, முழுமையாக சேதம் அடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உள்பட) ரூ.32 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும்,

* பகுதியாக சேதம் அடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும்,

* முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும்,

* முழுவதும் சேதம் அடைந்த எந்திர படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7½ லட்சமாகவும்,

* சேதம் அடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *