சிறீநகர், அக். 10–
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவ முயன்று வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். அவ்வாறு இந்திய எல்லைக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் கண்டறிந்து தக்க பதிலடி கொடுத்து சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
2 பேர் சுட்டுக்கொலை
மேலும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினருடன் இணைந்து அவ்வபோது பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சோபியன் பகுதியில் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்கள் லஷ்கர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜாசிம் பரூக், மோரிஃபாத் மக்பூல் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது.