செய்திகள்

மாடுகளை அழகுப் படுத்தி விவசாயிகள் பூஜை; தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தஞ்சாவூர் பெரிய கோவில் நந்திக்கு 2 டன் காய்கறி, பழங்களால் அலங்காரம்

சென்னை, ஜன. 16–

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாட்டாடப்பட்டது.

தைப்பொங்கல் தினத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வண்ணம், பொங்கல் படையலிட்டு அனைவரும் வணங்கினர். அதனை தொடர்ந்து 2ம் நாளில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

விவசாயிகளின் நண்பன், உழவனின் உயிர்த்தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில் விருந்து படைத்து, நன்றிக்கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். பொங்கல் பொங்குவதால் பட்டி பெருகும் என்பது ஐதீகம்.அதன்படி.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாட்டு பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளர்கள் கால்நடைகளை குளிப்பாட்டினர். பின்னர், மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சேர்த்தனர். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறு பூசி, குங்குமப்பொட்டு வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினர். பின்னர், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

தஞ்சாவூரில் 108 பசு

மாடுகளுக்கு பூஜை

தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது. மொத்தம் 20 டன் எடை உடையது. இந்த நந்தியெம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி மாட்டுப் பொங்கலான இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் நந்தியெம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை உள்பட பல வகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது.பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *