இம்பாலா, ஏப். 30–
6 வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மணிப்பூரில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற நிலையில் 2 ஆம் கட்டமாக 26 ந்தேதி 88 தொகுதிகளில் நடைபெற்றது. தொடர்ந்த அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற்று 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று மறுவாக்குப்பதிவு
இந்நிலையில், கடந்த 26 ந் தேதி மணிப்பூரில் தேர்தல் நடைபெற்றது. அப்போது, மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 30 ந்தேதி) மறு வாக்கப்பதிவு நடைபெற்று வருகிறது.