தெலுங்கானாவில் ராகுல் காந்தி வாக்குறுதி
ஐதராபாத், அக். 20–
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக ஐதராபாத் வந்தார். நேற்று 2-வது நாளாக பெத்தப்பல்லி மாவட்டத்தில் பேருந்து தேர்தல் பயணம் சென்ற அவர், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்கள் முன்னிலையில் பிரசாரம் செய்தார்.
அப்போது ராகுல் காந்தி, “நான் பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுகிறேன். அதனால் என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எ னது உறுப்பினர் பதவியை பறித்து விட்டனர். என் வீட்டையும் கைப்பற்றினார்கள்.
பாஜகவுக்கு மறைமுக ஆதரவு
உங்கள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரிக்கிறார். அதனால்தான் அவரது வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவதில்லை. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சியும் நாடு முழுவதும் தேர்தல்களில் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மக்கள் தொகை குறித்து கேட்டேன். அதில் கிடைத்த தகவல்படி, இந்தியா 90 உயர் அதிகாரிகளால் ஆளப்படுகிறது. ஆனால், இதில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவில் இருந்து 3 அல்லது 4 பேர் மட்டுமே இருக்கிறார்கள். மருத்துவத்துக்கு எக்ஸ்ரே தேவைப்படுவது போல, நாட்டுக்கு சமூகத்தின் நிலை என்ற எக்ஸ்ரே தேவைப்படுகிறது. எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், நம் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்கப்படும் என்றார்.