நெல்லை, டிச. 26–
நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18–ந்தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் சுமார் 7 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கி நின்றது. வெள்ளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால், பொதுமக்கள் அதிக இழப்புகளை சந்தித்தனர். முதலமைச்சர் உத்தரவுப்படி அதிகாரிகள், அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முழு வீச்சில் நடந்தது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 600 பேருக்கு அரிசி, வேட்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட், ரொட்டி, பால்பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மத்திய குழுவினரும் வருகை தந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12 கிராமங்கள் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக டோக்கன் வழங்கும் பணி அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் சென்று டோக்கன்களை வழங்கினார்கள். டோக்கன்களில் எந்த நாட்கள், எந்த நேரங்களில் ரேஷன் கடைக்கு வந்து நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.