செய்திகள்

“தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாது:” கனிமொழி எம்.பி. பேச்சு

கரூர், மார்ச்.29-

“பா.ஜனதா என்ன செய்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது” என்று கரூரில் நடந்த பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று கரூர் வெங்கமேட்டில் திறந்த வேனில் நின்றவாறு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

உடல்நிலை சரியில்லாத செந்தில் பாலாஜிக்கு ஒவ்வொரு முறையும் ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு விட்டு விடுவார்கள். அவர் உள்ளே இருக்கும்போது ஒருவர் கரூரில் நிற்க மாட்டேன் என கோவைக்கு ஓடி விட்டார்.

பா.ஜ.க. என்ன செய்தாலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு இடம் கூட கிடைக்கப்போவது இல்லை. அண்ணாமலை சொல்லக்கூடிய பொய்யை யாரும் எண்ண முடியாது. பா.ஜ.க. எதை சொன்னாலும் செய்யமாட்டார்கள். பிரதமர் மோடி ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்றார். ஆனால் உங்கள் கையில் இருந்த ரூ.500, ரூ.1,000 செல்லாது என பிடுங்கி சென்றுவிட்டார். ரூ.15 லட்சம் இன்றுவரை வரவில்லை. மோடி எந்த வாக்குறுதியாவது நிறைவேற்றி இருக்கிறாரா?

கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாக கூறினார். ஆனால் விலை இருமடங்கு ஆகிவிட்டது. அதேபோல் மானியம் எதுவும் வராது. வரும் ஆனா வராது, அதுதான் மோடி ஆட்சி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டக்கூடியவர். மகளிர் உதவித்தொகை, பெண்களுக்கு கட்டணமில்லாத பஸ் பயணம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர்.

இந்தியாவில் பசி, பட்டினியோடு இருக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கை பா.ஜனதா ஆட்சியில் அதிகரித்து இருக்கிறது. ஜி.எஸ்.டி.யால் சாமானிய மக்கள் வேலையில்லாமல் தவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். சிறுகடை வைத்திருப்பவர்களுக்கும் ஜி.எஸ்.டி. மேலும் ஜி.எஸ்.டி.யால் நூற்பாலைகளை மூடக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் 2 லட்சம் பேர் வேலை செய்த தொழிலில், தற்போது 50 ஆயிரம் பேருக்கு கூட வேலை இல்லை. அடித்தட்டு மக்களை வாட்டி வறுத்திக் கொண்டிருக்கிற ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி. இந்த தேர்தல் வெற்றி என்பது நாட்டை பாதுகாக்கக்கூடிய வெற்றி. நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை இந்த தேர்தலில் உருவாக்கி காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி கடைவீதிகளில் திறந்த வேனில் நின்றவாறு ஜோதிமணிக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்தார்ட.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *