டெல்லி, டிச. 26–
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
காலநிலை மாற்றத்தால் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. மேலும் கடுங்குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் காலை எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
மக்கள் கடும் அவதி
இந்த நிலையில் நேற்று காலை இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவியது. கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை போட்டபடியே வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். இதனிடையே, பனிமூட்டம் அதிகரித்துள்ள போதும், டெல்லியில் காற்றின் தரம் சற்று அதிகரித்துள்ளது அங்குள்ள மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.