சென்னை, அக். 10–
திமுக எம்.பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கி கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை மக்களவை தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருபவர் தயாநிதி மாறன். இவரது மனைவி பிரியா. இருவரும் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் இணைப்பு கணக்கு ஒன்றை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தயாநிதிமாறன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், தங்களது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூபாய் 1 லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறனின் மனைவி பிரியா மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும், புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், தி.மு.க. எம்.பி. மற்றும் அவரது மனைவியிடம் கைவரிசை காட்டப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.