சென்னை, அக். 10–
அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் அதிநவீன வசதிகளுடன் தோழி என்ற பெயரில் அரசு சார்பில் விடுதி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக சட்டசபையில் தோழி விடுதி குறித்து மதுராந்தகம் உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியது:–
“செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் மகளிர் விடுதி செயல்பட்டு வருகின்றன. கூடுவாஞ்சேரி மற்றும் திருச்சியிலும் புதிதாக தோழி விடுதி திறக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாறு, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் பழைய மகளிர் விடுதிகள் தோழி விடுதி நிறுவனம் மூலம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் உள்ள தாம்பரம், பரங்கிமலை, திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.