சென்னை, நவ.8–
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அழைப்பிதழில் கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றிருந்தது. அந்தவகையில் கவர்னர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.
ஏற்கெனவே, சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கவர்னர் கைழுத்திடாததால், மதுரை காமராஜர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் கடந்த வாரம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை பொன்முடி புறக்கணித்திருந்தார்.