பவானி, டிச. 8–
தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒரு வயது பெண் குழந்தை மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கைத்வா லியா மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற அருன்பாகத் (வயது 32). இவரது மனைவி சாந்தினி தேவி. இவர்களுக்கு மனிஷா குமாரி (11) மற்றும் போன்பி குமாரி என்ற ஒன்றை வயது பெண் குழந்தையும் உள்ளது. அருன்பாகத் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த பூம்புகார் தெருவில் வசித்து வருகிறார். இவர் கொங்கம்பாளையம்-கங்காபுரம் ரோட்டில் உள்ள ஒரு பிராசசிங் மில்லில் கடந்த 5 வருடமாக லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் அருண் பாகத் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். மூத்த மகள் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் சாந்தினிதேவி மற்றும் அவரது ஒன்றை வயது குழந்தை சோன்பிகுமாரி மட்டும் இருந்தனர். பின்னர் சாந்தினிதேவி வீட்டில் தூங்கி உள்ளார். குழந்தை சோன்பி குமாரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென தூக்கம் கலைந்து எழுந்த சாந்தினிதேவி வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரைத் தேடினார். பின்னர் வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தார். அப்போது பாத்திரங்கள் கழுவதற்காக தண்ணீர் ஊற்றி வைத்திருந்த தண்ணீர் வாளிக்குள் குழந்தை சோன்பிகுமாரி தலைகீழாக தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சித்தோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.