சென்னை, பிப். 19–
சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. ஆனால் ஆளுநர் மரபுப்படி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததுடன், சட்டப்பேரவையில் இருந்து நாட்டுப்பண் இசைக்கும் போதே வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு வரவுசெலவுத் திட்டம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
4 நாள் பயணம் ஏன்?
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென 4 நாள் பயணமாக விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து பிப்ரவரி 22ம் தேதி ஆளுநர் சென்னை திருப்புவார் எனவும், பஞ்சாப் ஆளுநர் ராஜினாமா செய்தது போல், கவர்னர் ரவியை ராஜினாமா செய்ய சொல்ல வாய்ப்பு என்றும் சில அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.