செய்திகள்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகளை இனி செயல்பட வைக்க முடியாது

திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தகவல்

சென்னை, அக். 3–

சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் கருவிகளை தொடர்ந்து செயல்பட வைப்பது சந்தேகம் தான் என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் உள்ளிட்ட இந்தியாவின் விண்வெளி ஆய்வு திட்டங்களிலும், இந்திய விண்வெளி ஆய்வு மையங்களிலும் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மூத்த விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

‘ஒளிரும் தமிழ்நாடு , மிளிரும் தமிழர்கள் ‘ எனும் தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்ரோ நிறுவன முன்னாள் தலைவர் கே. சிவன், சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்ட இயக்குநர் வனிதா முத்தையா, சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்–1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குனர் வி.நாராயணன், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.இராஜராஜன், யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் எம்.சங்கரன், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஒருங்கிணைத்த உயர் தொழில்நுட்ப குழு விஞ்ஞானி ஆசிர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், மேற்கண்ட 9 விஞ்ஞானிகளின் உழைப்புக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இனி செயல்படாது

நிகழ்ச்சியைத் தொடர்ந்து சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:–

தொடர்ந்து ‘சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் கருவிகளைச் செயல்பட வைப்பது சந்தேகம் தான். ஏனெனில் நிலவில் சூரிய ஒளியின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனாலும் நிலவு பற்றிய ஆய்வுகளுக்குத் தேவையான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளது. இவை நிலவைப் பற்றிய எதிா்கால ஆய்வுத் திட்டங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமை கிடைத்துள்ளது.

சந்திராயன் நோக்கம் நிறைவடைந்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுட்காலம் என்பது ஒரு முழு நிலவு நாள்தான் அதற்கு மேல் அதிலுள்ள கருவிகளை இயக்குவதற்கான சக்தி இல்லை. அப்படி இயக்க வேண்டுமெனில் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சூரிய ஒளி மின்சக்திதான். இந்த மின்சக்தியைப் பொருத்தே திட்டத்தின் ஆயுட்கால அளவு உள்ளது. ஆனால், போதிய அளவுக்கு வெப்பம் கிடைத்தால்தான் சூரியஒளி மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

நிலவுப் பகுதியில் மைனஸ் 150 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 175 செல்சியஸ் வரை வெப்ப நிலை அளவு இருக்கும். எனவே, இந்த அளவு வெப்பத்தை வைத்து சூரியஒளி மின்சக்தியால் கருவிகளை இயக்குவது சந்தேகம் தான். இதனால் தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளைச் செயல்பட வைப்பதும் சந்தேகம்தான் என விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *