செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒடிசா தம்பதியின் 1 வயது குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

சென்னை, அக்.16–

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒடிசா தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தையை 4 மணி நேரத்தில் செங்குன்றத்தில் தனிப்படைபோலீசார் மீட்டனர்.

ஒடிசாவில் இருந்து நேற்று குழந்தையுடன் வந்த நந்தினி கண்கார் – லங்கேஸ்வர் தம்பதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலேயே தூங்கிய நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை காணாமல் போனது.

இதுகுறித்து சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நள்ளிரவு 1 மணியளவில் குழந்தையை மர்ம நபர் ஒருவர் தூக்கிச் சென்றதை கண்டறிந்தனர்.

அந்த மர்ம நபர் ஆட்டோவில் குழந்தையுடன் ஏறிச் சென்றதும் சிசிடிவி பதிவு மூலம் கண்டறிப்பட்டது.

உடனடியாக ஆட்டோ எண்ணை வைத்து விசாரித்த போலீசார், ஆட்டோ ஓட்டுநரின் தகவலை கேட்டறிந்தனர். இதுகுறித்த விசாரணையில் ஆட்டோவில் வந்த மர்ம நபரை செங்குன்றத்தில் இறக்கிவிட்டதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செங்குன்றம் விரைந்த தனிப்படை போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில் தம்பதி ஒருவர் குழந்தையை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்து குழந்தை மீட்ட தனிப்படை போலீசார், அந்த குழந்தை ஒடிசா தம்பதியினர் குழந்தை தான் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து குழந்தையை கடத்திய ஜார்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதா தம்பதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் குழந்தை கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *