புதுடெல்லி, ஜன. 27–
டெல்லி அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாரதீய ஜனதா முயற்சி செய்து வருகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கடந்த 9 ஆண்டாகவே ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்கு பாரதீய ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. பாரதீய ஜனதாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. மதுபான வழக்கில் தன்னை கைது செய்யும் திட்டமும் இந்த முயற்சியின் பகுதி தான்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாரதீய ஜனதா சதி செய்து வருகிறது. 21 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 7 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.25 கோடி வரை பாரதீய ஜனதா பேரம் பேசியுள்ளது. 7 எம்.எல்.ஏக்களுமே பாரதீய ஜனதா கோரிக்கையை நிராகரித்து உள்ளார்கள்.
கடவுளும் மக்களும் எப்போதும் எங்களை ஆதரித்தனர். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றாக உள்ளனர். ஆம் ஆத்மி அரசு எவ்வளவு நல்லது செய்துள்ளது என்பது டெல்லி மக்களுக்கு தெரியும். டெல்லி மக்கள் “ஆம் ஆத்மியை” பெரிதும் நேசிக்கின்றனர். எனவே தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க நினைக்கும் பாரதீய ஜனதாவின் முயற்சி வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை பாரதீய ஜனதா செயலர் ஹரிஸ் குரானா மறுத்துள்ளார். ஆம் ஆத்மி எல்.எல்.ஏ.க்கள் யாரிடம் எல்லாம் பேசப்பட்டது என்பதையும், பாரதீய ஜனதாவிலிருந்து யார் பேசினார்கள் என்ற விவரத்தை வெளியிடுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை விசாரணையின் மீதான கவனத்தை திசை திருப்பம் முயற்சியாக அரவிந்த் ஜெக்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார் என தெரிவித்தார்.