செய்திகள்

பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பலி

சென்னை, அக். 30–

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி கபாலி தெருவை சேர்ந்தவர் ராஜ்பாலாஜி (13). இவர் பூந்தமல்லியை அடுத்த குமணஞ்சாவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட ராஜ்பாலாஜியை பூந்தமல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல்நிலை மோசமானதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சிறுவன் ராஜ்பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அவர்கள் வசிக்கும் பகுதியில் கழிவு நீர் தேங்கியிருப்பதும், முறையான சுகாதார பணிகள் மேற்கொள்ளாததும் அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் மாணவனின் உடலில் உப்பு அதிகமாகி சிறுநீரகம் செயலிழந்தால் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடம் அச்சத்தையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *