செய்திகள் நாடும் நடப்பும்

சரக்கு போக்குவரத்துக்கள் மேம்பட ரூ.52,000 கோடியில் புது திட்டங்கள்


ஆர்.முத்துக்குமார்


சரக்கு போக்குவரத்தை தேசம் முழுவதும் திறம்பட கையாள சாலை கட்டமைப்பு மிக அவசியமாகுகிறது. இந்தவகையில் சீனா கடந்த 30 ஆண்டுகளில் நெடுஞ்சாலை அமைப்பை எல்லா நகரங்களோடும் இணைத்து விட்டனர்.

இப்படி பெரிய சாலைகளை கிராமப் பகுதி சாலைகளோடு இணைத்து விடும்போது பல தொழில் உற்பத்தி சமாச்சாரங்கள் நாடெங்கும் பரவலாக உருவாக தயாரிப்பு திறனும் அதிகமாகி விடும்!

சமீபத்தில் பிஎம் கதி சக்தி திட்டத்தின்கீழ் கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.52,000 கோடியில் 6 திட்டங்களை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஎம் கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கதி சக்தி திட்டக் குழுவின் 56-–வது கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கதி சக்தியின் கீழ் ரூ.52,000 கோடியில் 6 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

முதலாவது திட்டத்தின்படி குஜராத் –- மகாராஷ்டிரா இடையே புதிதாக பசுமை வழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இரு மாநிலங்கள் இடையே 290 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் 3 ரெயில்வே மேம்பாலங்கள், 16 மேம்பாலங்கள், 130 சிறிய பாலங்கள், 430 சிறிய சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவை கட்டப்படும். சாலையின் திட்ட மதிப்பு ரூ.13,000 கோடி.

இந்த பசுமை வழி சாலை திட்டத்தால் குஜராத்தின் நவ்சாரி, மகாராஷ்டிராவின் நாசிக், அகமதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தொழிற்பேட்டைகள் அபார வளர்ச்சி அடையும். அதோடு குஜராத்தின் நவ்சாரி, வல்சாத் மற்றும் மகாராஷ்டிராவின் நாசிக் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வேளாண் சாகுபடி விற்பனை அதிகரிக்கும். பசுமை வழி சாலை திட்டத்தால் குஜராத், மகாராஷ்டிராவில் தொழில், வேளாண் துறை அதிவேகமாக வளர்ச்சி அடையும்.

இரண்டாவது திட்டத்தின்படி குஜராத் மாநிலத்தின் பனாஸ் கந்தா, பதான், மெக்சனா, காந்தி நகர், அகமதாபாத் ஆகிய 5 மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிதாக பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இது 214 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச் சாலையாக அமைக்கப்படும். பின்னர் இந்த சாலையை 8 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தி கொள்ள முடியும்.

அமிர்தசரஸ் –- சந்தல்பூர் வர்த்தக வழித்தடம், வடோதரா- மும்பை எக்ஸ்பிரஸ் சாலை ஆகியவற்றுடன் புதிய பசுமை வழிச் சாலை இணைக்கப்படும். இதன்மூலம் குஜராத்தின் தொழில், வேளாண், சுற்றுலா துறைகள் அபார வளர்ச்சி அடையும்.

மூன்றாவது திட்டத்தின்படி பீகார் தலைநகர் பாட்னா –- அர்ரா – சசாராம் நகரங்களை இணைக்கும் வகையில் 4 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. 118 கி.மீ. தொலைவு கொண்ட இந்த சாலை, நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்து செல்லும். புதிய விரைவு சாலையால் இப்பகுதி பழங்குடி மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

மேலும் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையுடன் பாட்னா -– அர்ரா – சசாராம் விரைவுச் சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் பீகாரில் இருந்து வாரணாசி, பிரயாக்ராஜ், லக்னோ, டெல்லி, கொல்கத்தாவுக்கு செல்வதற்கான பயண நேரம் குறையும்.

நான்காவது திட்டத்தின்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐந்தாவது திட்டத்தின்படி ஒடிசாவின் கன்ஜம், நயாகர், கந்தமால், பவுது, சம்பல்பூர், அங்குல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பசுமைவழி ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வழித்தடம் மேற்கு ஒடிசாவின் தொழிற்பேட்டைகள், கனிம சுரங்கங்களை கிழக்கு கடற்கரை பகுதி துறைமுகத்துடன் இணைக்கும்.

6-வது திட்டத்தின்படி கேரளாவின் துறவூர், அம்பலப்புழா இடையிலான ரெயில் வழித்தடம் இரட்டைவழி பாதையாக மாற்றப்பட உள்ளது. ரூ.1,262 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இப்படி விரிவான ஒரு சாலை திட்டம் வரும் போது அதன் காரணமாக எல்லா பகுதி விவசாய உற்பத்தியும் தயாரிப்பும் தங்கு தடையின்றி அதிவிரைவில் எங்கு வேண்டுமானாலும் சரக்குகளையும் பயணிகளையும் சென்றடைய செய்து விடலாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிமுக்கிய பங்களிப்பு சரக்கு போக்குவரத்தின் சிறப்பில் தான் இருப்பதால் இத்திட்டம் உரிய இறுதி வடிவம் பெற்ற உடனே செயல்பட துவங்கிட வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *