அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, மார்ச் 3–
மதுரை எய்ம்ஸ் கட்டட பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
இந்தியாவில் குடும்ப நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது ஒரே தவணையில் அளிக்க கூடிய மருந்தாகும். நோய்களை தடுக்கும் தடுப்பூசி திட்டத்தை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சம் பணியாளர்கள் மருந்து வழங்குகின்றனர்.
டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு குழந்தைத்தனமான காரணங்களை கூறுகிறது. மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால், பணிகள் துவங்கவில்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது. நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமரை அழைத்து வந்து அடிக்கல் நாட்டப்பட்டது. போலித்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் கட்டட பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.