செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் மீண்டும் சர்ச்சை கருத்து

புதுடெல்லி, அக். 9–

இந்தியா – கனடா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சில பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில மாதமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாகவே இந்தியா- கனடா உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்தியாவில் பயங்கரவாதியாக இருந்தாலும் அவர் கனடாவில் சுதந்திரமாகவே இருந்து வந்தார். அங்கே அவர் காலிஸ்தான் ஆதரவு அமைப்பையும் நடத்தி வந்தார். கடந்த ஜூன் மாதம் அவரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதே இதற்கு முக்கிய காரணமாகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கைகளை எடுத்தன. முதலில் இரு நாடுகளில் இருந்து தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

எந்தவொரு கனடா நாட்டவருக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என்று இந்தியாவும் அறிவித்தது. இப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில்,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று எக்ஸ் பக்கத்தில் சில பரபர கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். ஐக்கிய அரபு அதிபர் முகமது பின் சயீத்துடன் இந்தியா குறித்தும் சட்டத்தின்படி ஆட்சியை நடத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று ஐக்கிய அமீரக அதிபர் முகமது பின் சயீத்துடன் தொலைப்பேசி வாயிலாக பேசினேன். இஸ்ரேல் நாட்டில் தற்போது நிலவும் நிலைமை குறித்து இருவரும் பேசினோம். அங்குள்ள மக்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி விவாதித்தோம். மேலும், நாங்கள் இந்தியா பற்றியும், சட்டத்தின்படி ஆட்சி நடப்பதை மதிப்பது குறித்தும் பேசினோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தின் போது பேசிய ட்ரூடோ, “கனடா சட்டத்தின்படி ஆட்சி செய்யும் ஒரு நாடு. கனடா மண்ணில் கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்று கூறியிருந்தார். அதைக் குறிப்பிடும் வகையிலேயே ட்ரூடோ இப்படி ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *