அகமதாபாத், பிப்.5–
குஜராத் மாநிலம் முந்த்ராவில் 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் மிகப் பெரிய தாமிர உற்பத்தி ஆலையை அதானி குழுமம் அமைத்துள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் காப்பர் இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுகம், நிலக்கரி, விமான நிலையம், எரிசக்தி என பல்வேறு துறைகளில் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தாமிர உற்பத்தியிலும் இறங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலகநாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தியா மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரி சக்தி கட்டமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. இதனால், இந்தியாவில் காப்பர் தேவை அதிகரித்துள்ளது.
2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் காப்பர் பயன்பாடு 7.5 லட்சம் டன்னாக உள்ளது. 2027-ம் ஆண்டில் இது 17 லட்சம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் 1.81 லட்சம் டன் காப்பரை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்நிலையில், அதானியின் கட்ச் தாமிர உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அது இந்தியாவின் காப்பர் தேவையை பகுதியளவு பூர்த்தி செய்யும் என்றும் இதனால் இறக்குமதி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.