தலையங்கம்
பண்டைய சங்க காலத்தில் இருந்தே நமது செல்வ செழிப்புகளுக்கு அதிமுக்கிய காரணங்களாக இருந்தது புதுப்புது கண்டுபிடிப்புகள் ஆகும். ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் பெருவாரியான காலக் கட்டத்தில் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்ததால் நமது அறிவுசார் விவகாரங்கள் இங்கிலாந்து உட்பட பல மேற்கு நாடுகளுக்கு பெருமை சேர்த்து வந்தது.
ஆனால் கடந்து ஐந்து ஆண்டுகளாக புத்தாக்க தொழில் முனைவோர்கள் அதாவது Start Up நிர்வாகங்கள் அதிகரிக்க தரப்பட்ட ஊக்கங்கள் காரணமாக வெளி நாடுகளில் பணியாற்றி சம்பாதிக்கும் மன நிலை மாறி நம் தாய் மண்ணிலேயே பணியாற்றி ஓரளவு கை நிறைய சம்பதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நமது இளைஞர்கள் நம் நாட்டில் இருந்தே காப்புரிமை கோரும் விண்ணப்பங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் 75,000–க்கும் அதிகமான காப்புரிமைகள் பெற்று இருப்பது நமக்கெல்லாம் பெருமையே. இந்த புதுப்புது எண்ணங்களும் திட்டங்களும் நமது பொருளாதாரத்தை அதிவேகத்தில் முன்னோக்கி அழைத்துச் செல்லும் சக்தி மிக வாகனங்களாக இருக்கப் போகிறது.
இதுவரை நாம் செய்யும் பல திட்டங்கள், சேவைகள் எல்லாமே பிற நாடுகளில் உள்ளோர் சொந்தம் கொண்டாடும் விதமாக காப்புரிமை பெற்று இருப்பார்கள்.
ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் காப்புரிமை கோரினால் பல வருட தாமதங்கள் ஏற்படும் என்ற நிலை மாறி உடனே பரிசீலனை செய்யப்பட்டு உரிய முடிவுகள் உடனே அறிவிக்கப்படுகிறது.
உரிமை கோரி விட்டு காத்திருக்கும் நேரத்தில் அது பற்றிய ரகசிய தகவல்கள் கசிந்து பிறர் கையில் சிக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருந்து வந்தது.
ஆனால் புத்தாக்க தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் விண்ணப்பங்களை தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் பரிசீலனை செய்து உரிய முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கல்விக் கூடங்களும் விஞ்ஞான ஆய்வு அமைப்புகளும் கடந்த 10 ஆண்டுகளில் காப்புரிமை கோருவது 50 சதவிகிதம் அதிகரித்து விட்டதால் வரும் ஆண்டுகளில் இந்தியா ஆராய்ச்சித் துறையில் முன்னணி நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உயரும் நாள் வெகு தொலையில் இல்லை.
இதுவரை நமது பொருளாதாரம் மனித உழைப்பின் அடிப்படையில் மேம்பட்டு வந்தது, சமீபமாக அறிவு சார் வளர்ச்சிகளின் வருகையால் மனிதனின் ஆய்வுத் திறன் மற்றும் அறிவு சார் விவகாரங்கள் புதிய பாரதத்தை உருவாக்கிடப் போகிறது.
செயற்கை நுண்ணறிவு மனித குல வாழ்வியலையும் சிந்தனை சக்திகளையும் அயராத உழைப்பிற்கும் உதவ தயாராகிவிட்ட இத்தருணத்தில் இந்தியார்கள் அத்தொழில் நுட்பங்களைக் கையாளும் ஞானத்தையும்பெற்று அதன் உபயோகங்களும் மட்டுமின்றி அதை வடிவமைக்கும் வல்லமையையும் பெற்று புது யுகப் புரட்சியில் சிறப்பு மிக்க பங்காற்ற தயாராகி விட்டனர்.