சென்னை, டிச.10-–
கனமழையால் சேதமடைந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை), சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் 12-ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிவிக்கப்படும். சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்காக இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.