சென்னை, அக். 9–
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 7-வது முறையாகும்.
இந்நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு அவருக்கு சர்க்கரை நோய்க்கான பரிசோதனையும் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ பரிசோதனைக்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜிக்கு ரத்தம், இசிஜி, எக்கோ பரிசோதனைக்காக சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார். கால் மரத்துப்போனதால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். நடக்க சிரமப்பட்டதால் வீல் சேர் வழங்கப்பட்டதாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.