நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, டிச.10-–
கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4,800 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானது மட்டுமல்லாமல் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.
பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்களின் முக்கிய பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம் ஆகும்.
மாநில அரசு மின் வினியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ளபோதும், இந்த நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை தொடங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும்.
கூடுதல் மிகைப்பற்று (ஓவர் டிராப்ட்) வசதியை வழங்க வேண்டும். கூடுதல் மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.
பாதிப்புகளை காலதாமதம் இன்றி மதிப்பீடு செய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.