புதுடில்லி, மார்ச். 10-
“6 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் “சமுத்ராயன் திட்டம்” 2025ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும்” என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
சமுத்ராயன் திட்டத்திற்கான வாகனங்களை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. சமுத்ராயான் திட்டமானது, ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளிஉலகுக்குத் தெரியாததை வெளியே கொண்டு வர, மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள நீரில் மூழ்கக்கூடிய வாகனத்தை அனுப்புகிறது. இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சமுத்ராயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறுத்து கிரண் ரிஜிஜூ கூறியிருப்பதாவது:
“6 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் “சமுத்ராயன் திட்டம்” 2025ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். கடலுக்கு அடியில் 6 கிமீ ஆழத்தில் உள்ள ஆழ்கடல் பகுதியை தனது விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். “சமுத்ராயன் திட்டம்” தொடர்பாக வேலைகள் சிறப்பாக நடந்து வருகிறது. சமுத்ராயன் திட்டம் குறித்து பேசும் போது, கடலுக்குள் 6 கிலோமீட்டர் ஆழத்தில் ஆய்வு செய்ய நாங்கள் மேற்கொண்ட பணி பற்றியும் சிறப்பாக பேசப்படுகிறது”. இவ்வாறு அவர் கூறினார்.