செய்திகள்

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை: ஸ்டாலின் அறிக்கை

சென்னை, ஏப்.16–

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா ஏன் வரவே கூடாது? தமிழகத்தின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் –- தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் பார்லிமென்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, தமிழகம் உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில், லோக்சபாவில் 888 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா?. தமிழகத்தின் கோரிக்கைகளை, உரிமைக் குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக் கூட உச்சநீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மோடியின் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டளிப்பதற்கும், அண்ணா தி.மு.க.வுக்கு ஓட்டளிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாரதீய ஜனதாவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அண்ணா தி.மு.க.வையும் புறக்கணிப்போம். ஜனநாயகத்தையும் தமிழகத்தையும் காக்க இண்டியா கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *