படத்தை காண சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு
சென்னை, அக். 19–
விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியானது. முதல்நாளே இணையத்தளத்தில் படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியானது. அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் நேற்று தியேட்டர்களில் ரசிகர்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். நேற்று இரவே பல இடங்களில் தியேட்டர்களில் லியோ பட பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 900 தியேட்டர்களில் லியோ படம் வெளியானது. இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை பார்த்தனர். முதல் காட்சியை தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் மேள தாளத்துடன் வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.
பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் ‘லியோ’ திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் ‘லியோ’ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியான முதல் நாளே முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளதால் சினிமா துறையினர் மற்றும் திரை ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகரின்
கால் முறிந்தது
லியோ திரைப்படத்தை காண டிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த விஜய் ரசிகரின் கால் முறிந்தது.
கிருஷ்ணகிரி பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் அன்பரசு லியோ படத்திற்கு முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் காலை முதலே திரையரங்கு உள்ளே அனுமதிமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வந்துள்ளார். திரையரங்கு உள்ளே அனுமதிமதிக்காதை அடுத்து திரையரங்கின் பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றபோது தவறி விழுந்து அன்பரசு கால் முறிந்தது. இளைஞரை மீட்ட போலீசார் அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.