செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன்

விஜயவாடா, அக். 31–

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு திறன் மேம்பாட்டு முறைகேடு வழக்கில், ஆந்திர உயர்நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீசார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சந்திரபாபு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஜெகன்மோகன் அரசு பதிவு செய்தது.

இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல்செய்த மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகிய 2 வழக்குகளில் சந்திரபாபுவுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. ஃபைபர் நெட் வழக்கில் முன் ஜாமீன் வழங்க, ஆந்திர உயர்நீதிமன்றம் மறுத்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

4 வார இடைக்கால ஜாமீன்

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெல்லா எம் திரிவேதி அடங்கிய அமர்வு திறன் மேம்பாட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை கைது செய்யக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் வழங்கினர்.

இந்நிலையில், திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கு, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கைத் தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரிக்க விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், இந்த மனுவை தசரா விடுமுறை பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், நீதிபதி அதை ஏற்றுக் கொண்டார்.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், இன்று காலையில் தீர்ப்பளித்தது. அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *