சிறுகதை

வட்டிக்குப் பணம் – எம்பாலகிருஷ்ணன்

‘‘கருப்பா நில்லு’’,

என்கிட்ட கடன் வாங்கி நாலு மாசமாகுது.

நீ ரெண்டு மாசம் ஒழுங்கா வட்டி கொடுத்தே; அதுக்கப் புறம் வட்டி தராம ஏமாத்திட்டு இருக்கே ஏன் என்று கருப்பனிடம் கேட்டார் வட்டிக்கு பணம் கொடுக்கும் மலையப்பன்.

அண்ணே கோவிச்சிக்காதீங்க; என்னோட பொண்டாடிக்கு உடம்புக்கு முடியல. ஆஸ்பத்திரி செலவு வந்திடிச்சி. இந்த ஒரு மாசமட்டும் பொறுத்துக்கங்க; அடுத்த மாசம் சேர்த்து கொடுத்துடுறேன் என பதில் சொன்னான்.

இந்த மாசமே வட்டியை கொடுக்க முடியல. அடுத்த மாசம் எப்படி கொடுப்ப. எப்படியாச்சும் சமாளிச்சி கொடுத்துடுவேன் அண்ணே.

டேய் கருப்பா என்னை பத்தி உனக்கே நல்லா தெரியும். நான் மோசமானவன்; காசு விசியத்தில கண்டிப்பா நடக்கக் கூடியவன் ; பாத்து நடந்துக்க. அடுத்தமாசம் ஒழுங்கா வட்டிப் பணம் வந்து சேரணும்; இல்லையன்னா நடக்குறதே வேற என்று எச்சரித்தான் மலையப்பன்.

மலையப்பன் அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுப்பவர். அதுவும் அதிக வட்டி நூற்றுக்கு பத்து ரூபா; அதற்கு குறைத்து தர மாட்டார்.

அந்த ஊர்க்காரர்களுக்கு அவசரத்துக்கு எப்போதும் கேட்டாலும் உடனே கடன் கொடுப்பார். இல்லையென்று சொல்ல மாட்டார். ஆனால் நூறு ரூபாய் கேட்டால் வட்டி பத்து ரூபாய் எடுத்துக்கொண்டுதான் தருவார். ஆயிரம் ரூபாய் கேட்டால் வட்டி நூறு ரூபாய் எடுத்துத் தான் தருவார்

அதிக வட்டித் தான் என்ன செய்வது. அவசரத்துக்கு இவரை விட்டால் வேறு யாரிடமும் கிடைக்காதே. வேறு வழி இல்லாமல் மலையப்பனிடம் அந்த ஊர் ஜனங்கள் வாங்குவார்கள். ஆனால் வட்டி மட்டும் ஓழுங்காக வந்து சேரவில்லை யென்றால் அவருக்கு கோபம் மூக்கின் மேல் வந்து நிற்கும். கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்.

அதற்குப் பயந்தே வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் ஒழுங்காய் வட்டியை கொடுத்து விட்டுத் தான் மறு வேலையை பார்ப்பார்கள்.

வட்டியை ஒழுங்காய் கட்டாதவர்களிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்வார். அசலையும் வட்டியையும் கொடுத்த பிறகு தான் வீட்டு பத்திரத்தை கொடுப்பார். இல்லையென்றால் மேலும் சிறு தொகையை கொடுத்து விட்டு நாள் வட்டி போட்டு அசலையும் சேர்த்து சிறிய வீடாக இருந்தால் தன் பேருக்கு எழுதி வாங்கி கொள்வார்.

அநியாய வட்டிக்கு கடன் கொடுப்பவர் என்று மறைமுகமாக அவருக்கு பேருண்டு. அப்படிபட்டவரிடம் கடன் வாங்கக் கூடாது என்று தான் நினைப்பார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த ஊர் ஜனங்கள் அவரிடமே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த ஊர் ஜனங்கள் பாதி பேர்கள் கூலி வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு வருமானத்தை மீறி அவசர செலவுகள் ஏற்படுவதால் அதை மலையப்பன் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டார். இதில் அவர் வெளியூரில் ஏகப்பட்ட இடங்கள் வாங்கி வைத்துள்ளார்.

பணக்காரனாக வேண்டுமென்றால் அவரிடம் பாடம் கற்க வேண்டும்: அப்படி நினைக்கும் அளவில் அவரின் செயல்பாடு இருந்தது.

எதிர்த்து பேசுபவர்களைக் கைக்குள் போட்டுக் கொள்வார் மலையப்பன்.

மலையப்பனுக்கு ஒரே மகன் அவனுக்கு திருமணமாகி விட்டது. அவன் தந்தையின் செயல்பாடுகளை அவ்வப்போது கண்டிப்பான். ஆனால் அவர் மகனின் பேச்சை மதிப்பதில்லை.

அப்பா நீங்க அநியாய வட்டிக்கு பணம் கொடுக்கிறதை நிறுத்துங்க; கஷ்டப்படுறவங்க சாபம் நமக்கு வேண்டாம் என்றுக் கூறினால்

அதற்கு அவர் டேய்… மகனே… இந்த உலகத்தில காசு தான் முக்கியம். பணம் இல்லாட்டி மனிசன் வாழ முடியாது. காசு சேர்க்குறதே நம்ம குடும்பத்துக்கு தானே.

போதும்பா பாவபட்ட பணம் அது நம்ம குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாது.

டேய் உனக்கு இப்ப தெரியாது போகப் போகத் தான் தெரியும் என்று தந்தை மலையப்பன் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

மறுநாள் காலை மலையப்பன் வீட்டு வாசலில் இரண்டு போலீசார் நின்று கொண்டு மலையப்பனை அழைத்தனர்.

மலையப்பா உங்க மேல இந்த ஊர் ஜனங்க கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க.

மலையப்பன் வீட்டு வாசலில் வெளியே வந்து நின்று என் மேல் என்ன கம்ப்ளைன்ட் என்று கேட்டார்.

நீங்க அநியாய வட்டி கொடுத்து சில பேரு வீட்டை எழுதி வாங்கி இருக்கீங்க. அதுக்கு எங்ககிட்ட போதிய ஆதாரம் இருக்கு என்று போலீசார் கூறி ஆதாரங்களைக் காட்டி மலையப்பனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வீட்டை எழுதி வாங்கிய மலையப்பன் என்ற மலைப்பாம்பு வாலை சுருட்டிச் சென்றது போல் அவர் சென்றார்.

தவறு செய்த தந்தையை எவ்வளவோ சொல்லி பார்த்தும் இன்று பொது மக்கள் விழிப்புணர்வால் அவர் சிறைக்குச் செல்வது உறுதி தான் என்று எண்ணிய அவர் மகனே அவர் திருந்தி வரட்டும் என்று மனதுக்குள் சந்தோசப்பட்டான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *