சென்னை, மார்ச் 16–
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. தற்போது இந்த நடைப்பயணமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாளை மும்பை தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடத்தில் நிறைவு பெறுகிறது. இதன் பின்னர் நாளை மாலை மும்பை சிவாஜி பூங்காவில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொள்வதுடன், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.சென்னை விமான நிலையத்திலிருந்து நாளை காலை 9.40 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் அவர், 11.45 மணிக்கு மும்பை விமான நிலையம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு 10 மணியளவில் மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.