செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

சென்னை, அக்.8-

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டன. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ந்தேதி நிறைவடைந்து, சட்டசபை நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

சட்டசபை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி இம்மாதம் 20ந் தேதிக்குள் சட்டசபையை கூட்டுவது கட்டாயமாகும்.

இந்த நிலையில் சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடும் என்று கடந்த மாதம் 20ந் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

மேலும் அப்போது 2023–24ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

எத்தனை நாள்?

அதன்படி நாளை காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதல்நாள் கூட்டம் நடந்து முடிந்ததும் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வு குழு கூடும். இதில் சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் முதலில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

பின்னர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் சபாநாயகம், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து வினாக்கள் – விடைகள் நேரம் நடைபெறும். பின்னர் 2023–24ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவைக்கு அளிப்பார்.

காவிரி விவகாரம்

பின்னர் அரசினர் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி மத்திய அரசை வலியுறுத்த, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றும்படி முதலமைச்சர் கோருவார்.

இந்த தீர்மானத்தில் அந்தந்த அரசியல் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அண்ணா தி.மு.க., பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். எனவே சட்டசபையில் காரசார அரசியல் வாக்குவாதங்களை எதிர்பார்க்கலாம்.

மேலும் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு, அரசு திட்டங்கள் பற்றிய குறைபாடுகள் பற்றி எதிர்க்கட்சிகள் கிளப்பி பேசுவார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்க ஆளும் கட்சியினரும் தயாராக இருப்பார்கள். எனவே இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

கவர்னர் ஆர்.என்.ரவி பல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலை, இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். மேலும் புதிய சட்ட மசோதாக்கள், அவசர சட்டங்கள், கூடுதல் செலவீனங்களுக்கான மசோதா போன்றவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

––––––––––––––––––––––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *