செய்திகள்

பா.ஜ.க.வின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: நடிகை கங்கனா ரணாவத், மேனகா காந்திக்கு வாய்ப்பு

புதுடெல்லி, மார்ச்.25-

111 பேர் கொண்ட பா.ஜ.க.வின் 5-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத், மேனகா காந்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவை பொறுத்தவரை தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் பாரதீ ஜனதாவின் 5-வது வேட்பாளர் பட்டியல் நேற்று மாலையில் வெளியானது. இதில் 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அதில் இடம்பெற்றிருந்தனர்.

இதில் முக்கியமாக இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் களமிறக்கப்பட்டு உள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள கங்கனா ரணாவத், மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ராமராக நடித்தவர்

மீரட் தொகுதியில் போட்டி

மேலும் ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து புகழ்பெற்ற நடிகர் அருண் கோவில் உத்தரபிரதேசத்தின் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதைப்போல முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான மேனகா காந்திக்கு உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் அவரது மகனும், தற்போதைய பிலிபிட் தொகுதி எம்.பி.யுமான வருண் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில் மாநில மந்திரி ஜிதின் பிரசாதா களமிறக்கப்பட்டு இருக்கிறார்.

ராகுலை எதிர்த்து

சுரேந்திரன் போட்டி

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவரை எதிர்த்து மாநில பாரதீய ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டு உள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் நேற்று இணைந்த முன்னாள் எம்.பி.யும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் அரியானாவின் குருஷேத்ரா தொகுதியை பெற்று இருக்கிறார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகிய ஹேமந்த் சோரனின் குடும்ப உறுப்பினர் சீதா சோரனுக்கு, மாநிலத்தின் தும்கா தொகுதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு புரி தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வியை தழுவி இருந்தார்.

இந்த பட்டியலில் மத்திய மந்திரிகள் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அஸ்வினி குமார் சவுபே, வி.கே.சிங் ஆகிய மந்திரிகளுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இதைப்போல முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் குமார் ஹெக்டேவுக்கும் உத்தர கன்னடா தொகுதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *