பர்தா அணிந்து வந்த 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
தூத்துக்குடி, அக். 3–
தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் கத்தி முனையில் 60 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி (வயது65). இவர் ஸ்பிக்நகர் பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி மூத்த மகன் தங்கதுரை (38) சென்னையிலும், இளைய மகன் ஜான் செல்வசீனி (35) தஞ்சாவூரிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தங்கதுரை குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர், தனது மனைவி அஸ்வினி (35) மற்றும் 5 வயது மகனை தூத்துக்குடியில் அப்பா வீட்டில் விட்டு விட்டு மீண்டும் சென்னை சென்றுள்ளார்.
நேற்று மாலை அற்புதராஜ் கடைக்கு சென்று உள்ளார். இதனை நோட்டமிட்டு அறிந்து கொண்ட 2 மர்மநபர்கள் இரவில் பர்தா அணிந்து கொண்டு அவரது வீட்டுக்குள் சென்றுள்ளனர். வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அற்புதராஜின் மனைவி செல்வராணி (60) மற்றும் மருமகள் அஸ்வினி (35) ஆகிய 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களது கழுத்தில் இருந்த செயின் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்தனர்.
மேலும் பீரோவை திறக்கச் சொல்லி அதில் இருந்த மூக்குத்தி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட சுமார் 62 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்தனர். தொடர்ந்து மாமியார், மருமகள் இருவரையும் அவர்களது துப்பட்டாவை வைத்து கட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது பர்தா அணிந்து சென்ற மர்மநபர்களை பார்த்து பொதுமக்கள் சந்தேகமடைந்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் பர்தா அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேருக்கு மட்டும் தொடர்பு உண்டா? அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.